4G தொழில்நுட்பத்தை விட அதிவேகமான 5G தொழில்நுட்பம் பற்றிய ஆராச்சிகளை அடுத்த ஆண்டு தொடங்கவுள்ளதாக வெரிசோன் நிறுவனம் அறிவித்துள்ளது.இணைய பயனாளர்களுக்கு உதவும் வகையில் 2G தொழில்நுட்பம் கடந்த 1991 ஆம் ஆண்டு பின்லாந்து நாட்டில் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன் பின்னர் 3G, 4Gஎன்று வந்துவிட்டது.
தற்போது புழக்கத்தில் உள்ள 4G எனப்படும் 4வது தலைமுறை தொழில்நுட்பத்தின் மூலம் அதிவேக இணையவசதி, விளையாட்டுக்கள், துல்லியமான காட்சிகளை அளிக்கும் தொலைக்காட்சிகள் போன்ற சேவைகளை நாம் பெற்றுவருகின்றோம்.
4G தொழில்நுட்பம் மூலம் அதிகபட்சமாக நொடிக்கு 200Mbps வரையான தகவல்களை நாம் பெறலாம்.
இந்நிலையில் அமெரிக்காவின் தொலைத்தொடர்பு நிறுவனமான வெரிசோன் 5G தொழில்நுட்பம் குறித்து தனது ஆராச்சியை வரும் 2016 ஆம் ஆண்டில் தொடங்கவுள்ளதாகவும், 2020 ஆம் ஆண்டில் 5G தொழில்நுட்பத்தை சந்தைப்படுத்த முயற்சிப்பதாகவும் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு Remote surgery (ஒரு நாட்டில் இருந்தபடியே வேறு நாட்டில் உள்ள நோயாளிக்கு சிகிச்சையளிப்பது) தானாகவே இயங்கும் கார் தொடர்பான ஆராச்சிகளுக்கு புத்துயிர் ஊட்டியுள்ளது.
இதற்கு நோக்கியா, சாம்சங், எரிக்சன் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து ஆராச்சியில் ஈடுபடவும் அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
தற்போதுள்ள 4G தொழில்நுட்பத்தை விட 10 மடங்கு வேகமானதாக 5G தொழில்நுட்பத்தை உருவாக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதன் மூலம் ஒரு நொடிக்கு 2GB வேகத்தில் நாம் தகவலை பெற முடியும்.
அதாவது கண்ணிமைக்கும் வேகத்தில் ஒரு படத்தை பதிவிறக்கம் செய்யலாம்.
ஒரு வேளை இந்த 5G தொழில்நுட்பம் சந்தைக்கு வந்தால் தொழில்நுட்பங்களின் அத்தியாயம் மாற்றியமைக்கப்படலாம்.










