Wednesday, December 28, 2011

VLC Playerயில் குறிப்பிட்ட வீடியோ பகுதியை மட்டும் வெட்டி எடுப்பதற்கு


கணணி பயன்படுத்துபவர்கள் அனைவரும் VLC Playerஐ பற்றி அறிந்திருப்பார்கள். அத்துடன் பயன்படுத்தவும் செய்யலாம்.

VLC Player ஐப் பயன்படுத்தி காணொளி ஒன்றின்(Video) தேவையான பகுதி ஒன்றை எவ்வாறு வெட்டி எடுக்கலாம் என்று காண்போம்.

VLC Player இல் காணொளி ஒன்றை திறந்து கொள்ளுங்கள். பின் View->Advanced Controls என்பதை தெரிவு செய்யுங்கள்.

நீங்கள் தெரிவு செய்தவுடன் சில பொத்தான்கள் தோன்றும். இப்போது காணொளியின் தேவையான இடத்தில் Record பொத்தானை அழுத்துங்கள்.

பின் வெட்ட வேண்டிய பகுதியின் இறுதிப் பகுதி வந்ததும் மறுபடியும் Record பொத்தானை அழுத்துங்கள்.

இப்போது காணொளியின் வெட்டப்பட்ட பகுதி உங்கள் கணணியில் சேமிக்கப்பட்டுவிடும்.

இயங்கு தளம் Windows 7 எனில், My Videos இல் சேமிக்கப்படும் இந்த வீடியோ பகுதி சேமிக்கப்பட்டு விடும். இந்த முறையைப் பயன்படுத்தி ஒலிக்கோப்புகளில் இருந்தும் தேவையான பகுதியை வெட்டி எடுக்கமுடியும்.

சாதனை புரிந்த விண்டோஸ் 7

மிக வேகமாக விற்பனை செய்யப்படும் இயங்குதளம் என்ற பெயரினை விண்டோஸ் 7 பெற்றுள்ளது. அறிமுகப்படுத்தப்பட்டு 9 மாதங்களில் 17 கோடியே 50 லட்சம் பேர் இதனை வாங்கியுள்ளனர்.

இந்த வேகமான விற்பனைக்குக் காரணம் என்ன? இதற்கு முன்னர் மைக்ரோசாப்ட் விண்டோஸ் இயங்குதளம் பல பதிப்புகளை வெளியிட்டுள்ளது. இருப்பினும் ஏன் விண்டோஸ் 7 மட்டும் கூடுதலாக லாபம் ஈட்டித் தரும் வகையில் விற்பனை ஆகி உள்ளது என்ற கேள்வி பலரிடமிருந்து வந்துள்ளது.

இதற்குக் காரணம் மிக வெளிப்படையான ஒன்றுதான். இந்த சிஸ்டத்தில் தான் இதற்கு முந்தைய விண்டோஸ் பதிப்புகளில் இல்லாத பல அம்சங்கள் உள்ளன.

பழைய செயல்பாடுகள் முழுமையாக மாற்றப்பட்டு மேம்படுத்தப்பட்டு தரப்பட்டுள்ளன.

புதிய செயல்பாடுகள் அதிகமான எண்ணிக்கையில் இணைக்கப்பட்டுள்ளன. எனவே தான் பெரும்பான்மையானவர்கள் இந்த இயங்குதளத்திற்கு மாறியுள்ளனர்.

விண்டோஸ் 7 சிஸ்டம் கடந்த அக்டோபர் மாதம் 22ம் திகதி வெளியானது. ஒன்பது மாதங்கள் ஓடிவிட்டன. ஒரு மாதத்திலேயே இதன் விற்பனை 15 கோடியைத் தாண்டியது.

மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளபடி, ஒவ்வொரு நொடியிலும் ஏழு விண்டோஸ் 7 இயங்குதளம் விற்பனையானது. இன்னும் இது தொடர்கிறது. நிச்சயம் இதுவரை எந்த இயங்குதளமும் எட்டாத இலக்கினை இது எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2011ம் ஆண்டு சாதனை படைத்த தொழில்நுட்பங்கள்


சென்ற 2011ஆம் ஆண்டில் பல நிறுவனங்கள் அறிமுகப்படுத்திய புதிய தொழில்நுட்பங்களும், சாதனங்களும் தோல்வியைத் தழுவின.

ஆனால் சில நிறுவனங்கள் கொண்டு வந்த தொழில் நுட்பத்திற்கு சிறந்த வகையில் வெற்றியும், மக்களிடையே அந்த சாதனங்களுக்கு வரவேற்பும் இருந்தன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.

1. ஆப்பிள் நிறுவனத்தின் சிரி(Siri): ஆப்பிள் நிறுவனம் வழங்கிய ஐபோன் 4S மக்கள் எதிர்பார்த்த பல மாற்றங்களுடன் வரவேற்பைப் பெற்றது.

வேகமாக இயங்கும் ப்ராசசர், சிறந்த அம்சங்களுடன் கூடிய கமெரா ஆகியவை இருந்தன. ஆனால் ஒரு பெரிய மாற்றத்தைத் தந்து கொண்டிருக்கும் சிரி என்னும் தொழில்நுட்பத்தினை ஆப்பிள் இந்த போனில் கொடுத்தது.

நம் ஒலி வழி தரும்(Voice Command) கட்டளைகளைப் புரிந்து கொண்டு செயல்படுத்துவதுடன் பதில் அளிக்கவும் செய்கிறது. ஆண்ட்ராய்ட் மற்றும் விண்டோ போன்களில் இந்த வகை வசதி இருந்தாலும், ஒலி வழி தருவதில் அவை பல வரையறைகளைக் கொண்டுள்ளன.

ஆனால் ஐபோன் இயற்கையான மொழி வழியை எளிதில் உணர்ந்து கொண்டு செயல்படுகிறது. ஆர்ட்டிபிசியல் இன்டலி ஜென்ஸ்(Artificial Intelligence) எனப்படும் செயற்கை நுண்ணறிவுத் திறன் இப்போது நம் பாக்கெட்டில் ஐபோன் 4S உடன் கிடைக்கிறது.

வரும் ஆண்டில் இது இன்னும் பல சாதனங்களில் கிடைக்கும். தொழில் நுட்பமும் மேம்பாடு அடையும். கணணகளில் இதனைப் பயன்படுத்துகையில் பேசியே கட்டளைகளைத் தர முடியும்.

2. சாம்சங் கேலக்ஸி போன்கள்: ஸ்மார்ட் போன்களைத் தருவதில் ஆப்பிள் நிறுவனம் மட்டுமின்றி, சாம்சங் நிறுவனமும் சில சாதனைகளை ஏற்படுத்தியது.

மிகக் குறைவான தடிமனில் ஆண்ட்ராட்ய்ட் சிஸ்டத்துடன் வடிவமைக்கப்பட்டு இவை வெளிவந்து சாதனையை ஏற்படுத்தின. இது வரும் ஆண்டிலும் தொடரும். மேலும் பல மேம்பாடுகளை அடையும்.

3. ஆப்பிள் ஐ-பேட் 2: தடிமன் குறைவாக, மிகக் குறைவான எடையில் ஐ-பேட் 2 சாதனத்தைக் கொண்டு வந்து தன்னுடைய போட்டியாளர்களைக் கதி கலங்க வைத்தது ஆப்பிள் நிறுவனம். ஏனென்றால் மற்ற நிறுவனங்கள் அப்போது தான் தங்களுடைய டேப்ளட் பிசியை எப்படி வடிவமக்கலாம் என்பது குறித்து சிந்தித்து வந்தன.

அந்த போட்டி நிறுவனங்கள் விழித்துக் கொண்டு தங்களுடைய டேப்ளட் பிசிக்களைக் கொண்டு வந்த போது ஆப்பிள் டேப்ளட் பிசி என்றால் ஐ-பேட் 2 தான் என ஒரு பிரமிப்பை ஏற்படுத்தியிருந்தது. அக்டோபர் 2011ல் இவற்றின் விற்பனை 4 கோடியை எட்டியது உலக சாதனை. இந்த ஆண்டிலும் இது தொடரும்.

4. விண்டோஸ் போன்: மைக்ரோசாப்ட் வழங்கிய விண்டோஸ் போன், ஆப்பிள் ஐ-போன் மற்றும் ஆண்ட்ராய்ட் எதிர்த்து இடம் பெறுமா என்பது ஐயம் என்றாலும், விண்டோஸ் போன் அறிமுகம், இவற்றிற்கு எதிராக, சரியான காய் நகர்த்தல் என்றே அனைவரும் கருதுகின்றனர்.

2010ல் முழுமை அடையாத ஒரு விண்டோஸ் போன் மென்பொருள் தொகுப்பினை, மைக்ரோசாப்ட் வெளியிட்டாலும் அடுத்த ஆண்டில் முழுமையான போன் ஆப்பரேட்டிங் சிஸ்டமாக விண்டோஸ் போன் சிஸ்டத்தைக் கொண்டு வந்தது.

Copy and Paste வசதி, ஒரே நேரத்தில் பல செயல்பாடுகளை இயக்கும் திறன், எச்.டி.எம்.எல். 5க்கான சப்போர்ட், முன்பக்க கமெரா சப்போர்ட் ஆகியவை இதன் சிறப்பம்சங்களாக விளங்குகின்றன.

நோக்கியா நிறுவனத்துடன் விண்டோஸ் போன் சிஸ்டத்துடன் போன்களைக் கொண்டு வர மைக்ரோசாப்ட் மேற்கொண்ட ஒப்பந்தம் இதனை இன்னும் வேகமாக மக்களிடையே கொண்டு வரும் முயற்சியானது.

மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு மொபைல் உலகில் ஒரு திருப்புமுனையை விண்டோஸ் போன் ஏற்படுத்தியது. வரும் ஆண்டில் இது ஓர் ஆதிக்க நிலையை ஏற்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

5. கூகுள் ப்ளஸ்: ஒருவழியாக 2011ல் பிரச்னை இல்லாத சமுதாய தளம் ஒன்றை கூகுள், கூகுள் ப்ளஸ் என்ற பெயரில் ஏற்படுத்தியது.

சிறிது நாட்களிலேயே இதற்கு 4 கோடி வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைத்தது. இந்த வகையில் முன்னணியில் இயங்கும் தளமான பேஸ்புக் தளத்திற்கு இணையான, போட்டியான செயலாக இது அறியப்பட்டது.

ஆர்குட் போன்ற தளங்கள் தர முடியாத போட்டியை கூகுள் ப்ளஸ், பேஸ்புக் தளத்திற்கு தந்தது. வரும் ஆண்டில் இவை இரண்டு மட்டுமே இந்த வகையில் போட்டியில் இருக்கும் நிலை ஏற்படும்.

6. கூகுள் குரோம்: மெல்ல மெல்ல தன் நிலையை உறுதி செய்து இன்று, பயர்பொக்ஸ் பிரவுசருக்குப் போட்டியாக அதன் இடத்தைப் பிடிக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது கூகுள் குரோம் பிரவுசர்.

நவம்பர் மாதம் பிரவுசர் போட்டியில் பயர்பொக்ஸைப் பின்னுக்குத் தள்ளியுள்ளது உண்மை. வரும் ஆண்டில், தன் பங்கினை மேலும் உயர்த்த பல புதிய பரிமாணங்களுடன் குரோம் பிரவுசர் வரலாம்.

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசருக்கு நிச்சயமாய், குரோம் பிரவுசர் சரியான போட்டியைத் தரும் என்று எதிர்பார்க்கலாம்.

துண்டுக் காகிதங்களிலிருந்து மின்சாரம் தயாரித்து சொனி நிறுவனம் சாதனை

ஒரு துண்டுக் காகிதம் ஒன்றில் இருந்து மின்சாரம் உருவாக்கும் தொழில்நுட்பத்தை உலகின் பிரபல மின் உபகரணங்களைத் தயாரிக்கும் நிறுவனமான சொனி கண்டுபிடித்துள்ளது.

இந்தக் கண்டுபிடிப்பின் மூலம் சொனி நிறுவனம் தனது சுற்றுச் சூழல் தொடர்பான சமூக அக்கறையினையும் வெளியிட்டுள்ளது.

வீணாகப் போகும் துண்டுக் காகிதத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் செயன்முறையினை சொனி நிறுவனம் அண்மையில் மாணவர்களுக்கு விளக்கியது.

துண்டு துண்டாக வெட்டப்பட்ட காகித அட்டையை ஒரு போத்தலினுள் இட்டு அதனுள் தண்ணீரையும் சேர்த்து நன்றாக குலுக்கி சில நிமிடங்கள் வைக்கப்பட்டது.

குறித்த சில நிமிடங்களின் பின்னர் கலவையிலிருந்து உருவாகிய மின்சாரத்தில் இருந்து சிறிய மின்விசிறி சுழல வைக்கப்பட்டது.

மரத் துண்டை அரித்து உண்ணும் கறையான் பெறும் சக்தியும் இதே தொழிநுட்பத்தில் தான் இயற்கையால் செயற்படுத்தப்பட்டதாக சொனி நிறுவனத்தின் பொதுமக்கள் தொடர்பு முகாமையாளரான Chisato Kitsukawa தெரிவித்தார்.

இதற்கு முன்னரும் இந்த வகையில் மின்சாரம் தயாரிப்பது குறித்து கல்வி ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வருங்காலத்தில் நீர்மின்சக்தி, நிலக்கரி மூலம் மின்சக்தி, அணுமின்நிலையம் போன்ற மின் உருவாகும் மூலங்களுக்கு இப்படியான மாற்றுவழிகள் மூலம் மின்சாரம் கிடைத்தால் இயற்கையும் பாதுகாப்பாக இருக்கும்.